ராமாவரம் போலீஸ் அதிகாரியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
போரூர்:
போரூர் வைகை தெரு சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் உமாசங்கர். இவர் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.
கடந்த நவம்பர் மாதம் 6-ந் தேதி உமாசங்கர் கிண்டி போரூர் டிரங்க் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 3பேர் கும்பல் உமாசங்கர் பைக் மீது மோதினர்.
இதை தட்டி கேட்ட உமாசங்கரிடம் குடிபோதையில் இருந்த 3 பேரும் தகராறில் ஈடுபட்டனர். தீடீரென உமாசங்கரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.
போலீஸ் அதிகாரியை தாக்கி செல்போன் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் உத்தரவிட்டார்.
ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் கார் எண் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது பறித்து சென்ற செல்போனை அவர்கள் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்து உமாசங்கரை தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ராமாபுரம் வள்ளுவர் சாலையை சேர்ந்த கமலக்கண்ணன், சங்கர், ராஜ்குமார் என்பது தெரிய வந்தது.
3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.