திண்டுக்கல் அருகே விபத்து - 2 பேர் பலி
வேடசந்தூர்:
குஜிலியம்பாறையில் இருந்து திண்டுக்கல்லுக்கு வெங்காயம் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் வந்தது. வேடசந்தூர் அருகே கிரியம்பட்டி பகுதியில் வந்தபோது வேனின் பின் பக்க டயர் பஞ்சரானதால் சாலையோரம் நிறுத்தி வேறு டயர் மாற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போது சேலத்தில் இருந்து மதுரைக்கு சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த சரக்கு வேன் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் வேன் முற்றிலும் சேதம் அடைந்தது.
டயர் மாற்றிக் கொண்டிருந்த வேன் உரிமையாளர் குஜிலியம்பாறையை சேர்ந்த பாக்கியராஜ் (வயது35), டிரைவர் குமார் (38) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள்.
லாரி டிரைவர் சேலம் ஓமலூரை சேர்ந்த அன்பரசன் என்பவர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.