செய்திகள்
கரூர் அருகே தீயில் கருகி மூதாட்டி பலி
கரூர் அருகே அடுப்பில் சுடுதண்ணீர் போட்டபோது சேலையில் திடீரென தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலாயுதம் பாளையம்:
கரூர் மாவட்டம், புகளூர் பசுபதிநகரை சேர்ந்தவர் நாச்சியம்மாள் (வயது 76). இவர் குளிப்பதற்காக தரை மட்டத்தில் உள்ள அடுப்பில் சுடுதண்ணீர் போட்டார். அப்போது அவர் கட்டியிருந்த சேலையில் திடீரென தீப்பிடித்து உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறினார். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நாச்சியம்மாள் மீது பற்றிய தீயை அணைத்தனர்.
பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நாச்சியம்மாள் உயிரிழந்தார்.
இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.