மெஞ்ஞானபுரம் அருகே கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ளது நங்கைமொழி கிராமம். இங்கு மந்திரமூர்த்தி என்ற இரட்டை சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை மேலராமசாமியாபுரத்தைச் சேர்ந்த தங்கவேல்(76) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த கோவில் பூசாரி உலகுபிள்ளை சம்பவத்தன்று வழக்கம் போல் இரவு 7மணிக்கு பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்று விட்டார். மறுநாள் காலையில் பூஜை செய்ய கோவிலை திறக்க சென்றபோது கோவில் கேட் உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி தங்கவேல் மெஞ்ஞானபுரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் கொள்ளை சம்பவம் மூன்றாவது முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.