வேலூரில் திருடிய பைக் கொள்ளையர்கள் 2 பேர் கைது
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு இ.செந்தில் தலைமையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பேபி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், அந்த மோட்டார் சைக்கிள் வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த சந்தானம் என்பவருக்கு சொந்தமானது என்பதும், ஆரணியில் திருடப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில், வாலாஜாபேட்டையை அடுத்த சாத்தம்பாக்கத்தை சேர்ந்த சத்யா (வயது 25), ராணிப்பேட்டை பெரியதாங்கலை சேர்ந்த கருணாகரன் (48) என்பதும், இவர்கள் ஆரணி, களம்பூர், வேலூர், ஆரணி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட 15 மோட்டார் சைக்கிள்களை எஸ்.யு.வனம் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறினர்.
இதையடுத்து 15 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து சத்யா, கருணாகரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் ஏற்கனவே வழிப்பறி, ஆடு திருட்டு, மோட்டார் சைக்கிள் திருட்டு என பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.