செய்திகள்

பல அரிய நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளது- அமைச்சர் சீனிவாசன் பேச்சு

Published On 2018-12-26 10:49 GMT   |   Update On 2018-12-26 10:49 GMT
பல அரிய நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மட்டுமே மருந்து உள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #ministersrinivasan

திண்டுக்கல்:

சித்த மருத்துவர்களுக்கு தலைவராக விளங்கும் அகஸ்தியர் பிறந்ததினம் சித்தமருத்துவ தினவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் தேசிய சித்தமருத்துவ தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் விஜயா வரவேற்புரையாற்றினார். மாவட்ட கலெக்டர் வினய் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

உலகில் நம்முன்னோர்கள் சித்தமருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து உள்ளனர். தற்போது கூட டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலுக்கு சித்தமருத்துவ முறையே சிறந்ததாக உள்ளது. இதுபோல பல அரியநோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மட்டுமே மருந்து உள்ளது.

வீடுகளில் பிரசவம் பார்த்த சமயங்களில் தாயும், சேயும் நலமாக காப்பாற்றப்பட்டனர். எனவே சித்தமருத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் போற்றி மதிக்கவேண்டும். தமிழகஅரசு சித்தமருத்துவத்திற்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சென்னையில் தனியாக ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணிநேரமும் செயல்படும் 6 ரத்த சுத்திகரிப்பு மையங்கள், பழனியில் ஒரு மையம் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அதனால்தான் பல பகுதிகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் மேயர் மருதராஜ், நலப்பணிகள் இணைஇயக்குனர் டாக்டர் மாலதிபிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு மூலிகை கண்காட்சியை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். #ministersrinivasan

Tags:    

Similar News