செய்திகள்

மயிலாடுதுறை அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலைமறியல்

Published On 2018-12-21 16:42 GMT   |   Update On 2018-12-21 16:42 GMT
மயிலாடுதுறை அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர், பொட்ட வெளிபகுதியில் உள்ள 3 தெருக்களுக்கு கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார்  செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பொட்ட வெளியில் உள்ள பூம்புகார்-கல்லணை சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

அதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News