செய்திகள்

பளுகல் அருகே விவசாயி அடித்துக் கொலை- வாலிபர் வெறிச்செயல்

Published On 2018-12-21 13:29 GMT   |   Update On 2018-12-21 13:29 GMT
பளுகல் அருகே தகராறில் விவசாயியை அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குழித்துறை:

களியக்காவிளை அருகே பளுகல் இடைக்கோடு காஞ்சிரதட்டு விளையை சேர்ந்தவர் சுபின் (வயது 31). கட்டிட தொழிலாளி.

இவரது வீட்டின் முன்பு நின்ற சந்தன மரம் ஒன்றை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருட்டுபோனது. இது தொடர்பாக சுபின் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் செல்வதாசுடன் தகராறில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி செல்வதாஸ் தனது மாடு ஒன்றை அந்த பகுதியில் கட்டி இருந்தார். அதை சுபின் பிடித்துக்கொண்டு தனது வீட்டின் அருகே கட்டினார்.

இதை தட்டி கேட்பதற்காக செல்வதாஸ் அங்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுபின் உறவினர் செல்வதாசை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்வதாஸ் பலத்த காயம் அடைந்தார்.

அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செல்வதாஸ் தாக்கப்பட்டது குறித்து பளுகல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சுபின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சுபின் தலைமறைவாகி விட்டார்.

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வதாஸ் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வதாஸ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

செல்வதாஸ் பலியானதை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பலியான செல்வதாசின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

Tags:    

Similar News