செய்திகள்

பூதப்பாண்டி அருகே கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலி

Published On 2018-12-20 12:35 GMT   |   Update On 2018-12-20 12:35 GMT
பூதப்பாண்டி அருகே முதல் மாடியில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலியானார்.

நாகர்கோவில்:

பூதப்பாண்டியை அடுத்த கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது55). கட்டிடத் தொழிலாளி. நேற்று மாலை பூதப்பாண்டி காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஞானதாஸ் மற்றும் அவரது நண்பர் அஜித்(20) ஆகியோர் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர். முதல் மாடியில் அவர்கள் இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் இருந்து ஞானதாஸ் தவறி விழுந்தார்.

உடனே பதறிப்போன அவரது நண்பர் அஜித் கூச்சலிட்டு அலறினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

இதையடுத்து தலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஞானதாசை அவர்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் காதர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News