செய்திகள்

மெரினா கடற்கரையில் கண்காணிப்பு காமிரா - போலீஸ் கமி‌ஷனர்

Published On 2018-12-20 09:41 GMT   |   Update On 2018-12-20 09:41 GMT
மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதியதாக கண்காணிப்பு கேமராக்க அமைக்கப்படவுள்ளதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். #MarinaBeach
சென்னை:

மெரினா கடற்கரையில் ஆணையாளர் கார்த்திகேயனும், போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் ஆகியோர் அங்கு முறைப்படுத்தப்பட்ட கடைகளையும், மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவு பணிகளையும் ஆய்வு செய்தனர்.

மாநகராட்சியின் சார்பில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் தலா ரூ.84.75 லட்சம் மதிப்பிலான 8 நவீன டிராக்டர் மூலம் இயக்கப்படும் மணல் ஜலிக்கும் இயந்திரங்களை கொண்டு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வியந்திரங்கள் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போன்ற தேவையற்ற பொருட்களை தனித்தனியே பிரித்தெடுக்கும் திறனையும், மேலும் ஒரு மணிநேரத்தில் 8 ஏக்கர் பரப்பளவுடைய இடத்தை சுத்தம் செய்யும் திறனையும் உடையது.

கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என பிரிக்கப்பட 150 புதிய குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளது.

கடற்கரையை தூய்மைப்படுத்தி, மேலும் அழகுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி கமி‌ஷனர் தெரிவித்தார்.

மாநகர காவல் துறையின் சார்பில், மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் புதியதாக கண்காணிப்பு கேமராக்களும், உயர்கோபுர மின்விளக்குகளும் அமைக்கப்படவுள்ளன எனவும், கடற்கரையில் ரோந்து காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, இரவு நேரங்களிலும் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின் போது துணை ஆணையாளர் (பணிகள்) கோவிந்தராவ், துணை ஆணையாளர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி, மத்திய வட்டார துணை ஆணையாளர் சுபோத்குமார், தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) மகேசன், மேற்பார்வை பொறியாளர் (மின்சாரம்) துரைசாமி, மண்டல அலுவலர் அனிதா உடன் சென்றனர். #MarinaBeach
Tags:    

Similar News