செய்திகள்

எஸ்.எம்.எஸ். கொடுத்தால் ஆவின் பொருட்கள் வீடு தேடி வரும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

Published On 2018-12-15 05:46 GMT   |   Update On 2018-12-15 05:46 GMT
எஸ்.எம்.எஸ். கொடுத்தால் ஆவின் பால் பொருட்களை வீடுதேடி வினியோகம் செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #AavinMilk #MinisterKadamburRaju
தூத்துக்குடி:

ஆவின் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

பால் உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தில் குஜராத் இருந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பால் உற்பத்தியை பெருக்குவதற்காக இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகளை வழங்கினார். அதன்பேரில் தற்போது தமிழ்நாடு பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் வெண்மை புரட்சி ஏற்பட்டு உள்ளது. பால் உற்பத்தியை பெருக்குவதற்காக கால்நடைகளுக்கு அரசு தீவனம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சைக்கிள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தனியாருக்கு சற்றும் குறைவு இல்லாமல் ஊக்கத்தொகை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பால் 100 சதவீதம் சுத்தமான பால் ஆகும். ஆவின் பால் பூத்களுக்கு தேவையான பொருட்கள் உடனடியாக வழங்கப்படும். எஸ்.எம்.எஸ். கொடுத்தாலே பால் பொருட்களை வீடுதேடி வினியோகம் செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.


பால் கொள்முதல் விலை உயர்த்துவது தொடர்பாக முதல்அமைச்சர் நல்ல அறிவிப்பை தருவார். ஆவின் பால் பூத்களில் ஆவின் தவிர மற்ற பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சத்துணவில் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.  #Aavin #MinisterKadamburRaju
Tags:    

Similar News