செய்திகள்

நிலத்தகராறில் ஓய்வு பெற்ற கிராம ஊழியர் அடித்துக் கொலை - வாலிபர் கைது

Published On 2018-12-13 17:45 GMT   |   Update On 2018-12-13 17:45 GMT
அஞ்செட்டி அருகே நிலத்தகராறில் ஓய்வு பெற்ற கிராம ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள கொடகரை கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 62). ஓய்வு பெற்ற கிராம ஊழியர். அதே பகுதியை சேர்ந்த தொட்டப்பா என்பவருடைய மகன் சிவருத்திரா (25). ராமகிருஷ்ணனுக்கும், தொட்டப்பாவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிவருத்திரா குடித்து விட்டு மது போதையில் வந்து நிலம் தொடர்பாக ராமகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சிவருத்திரா கீழே கிடந்த கட்டையை எடுத்து ராமகிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே சிவருத்திரா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராமகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமகிருஷ்ணனின் மகன் மாரியப்பன் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவருத்திராவை கைது செய்தனர்.

நிலத்தகராறில் ஓய்வு பெற்ற கிராம ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News