செய்திகள்

நொளம்பூரில் ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக் கொலை - போலீசை தாக்கியவன்

Published On 2018-12-13 12:24 GMT   |   Update On 2018-12-13 12:24 GMT
நொளம்பூரில் ஜாமீனில் வந்த ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

நொளம்பூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவன் சதீஷ் (30). ரவுடி. இவன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த மாதம் கோயம்பேட்டில் ஒருவரை வெட்டி வழிப்பறி செய்த வழக்கில் சதீசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவன் ஜாமீனில் வெளியே வந்தான்.

நேற்று இரவு சதீஷ் நொளம்பூர், பாஞ்சாலி அம்மன் நகர் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நண்பர்களுடன் மது அருந்தினான். அப்போது ஆட்டோவில் 5-க்கும் மேற்பட்ட மர்ம வாலிபர்கள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர்.

அவர்கள் சதீசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் இருந்த நண்பர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

பலத்த காயம் அடைந்த சதீஷ் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். உயிருக்கு போராடிய சதீசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார்.

இறப்பதற்கு முன்பு சதீஷ் நொளம்பூரை சேர்ந்த ரவுடி ஜெயசீலன் தன்னை வெட்டியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான ஜெயசீலனை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால்தான் உடன் வந்த கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வரும்.

கொலையுண்ட சதீஷ் மீது 2014-ம் ஆண்டு மதுரவாயலில் நடந்த ஒரு இரட்டை கொலை வழக்கு உள்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்னர் பூந்தமல்லியில் அன்பழகன் என்ற போலீஸ்காரரை வெட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News