செய்திகள்

சேலத்தில் நள்ளிரவில் விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி

Published On 2018-12-10 11:10 GMT   |   Update On 2018-12-10 11:10 GMT
சேலத்தில் விடுதி மாடியில் இருந்து கல்லூரி மாணவி கீழே விழுந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேல்வெண்ணீயூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் மீரா (வயது 20).

இவர் சேலம், கோரிமேட்டில் உள்ள பெண்கள் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், கல்லூரிக்கு செல்வதற்கு ஏதுவாக சேலம் தமிழ்ச்சங்கம் ரோட்டில் உள்ள அரசு விடுதியில் தங்கி உள்ளார்.

நேற்று இரவு விடுதியின் முதல் மாடியில் இருந்து மாணவி மீரா திடீரென கீழே விழுந்தார். அவரது அலறலை கேட்டு விடுதியில் இருந்த மற்ற மாணவிகள் எழுந்து அங்கு ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது மீரா பலத்த காயங்களுடன் ரத்தம் வழிந்தோடிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சக மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரு வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.

ஆஸ்பத்திரியில் மீராவுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து உள்நோயாளிகள் பிரிவில் சேர்த்தனர். தொடர்ந்து மீராவுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி டாக்டர்கள் கூறுகையில், மீராவுக்கு முதுகு எலும்பில் அடிபட்டுள்ளது., அதற்கான சிகிச்சைகள் தற்போது அளித்து வருகிறோம் என்றனர்.

விடுதி மாணவிகள், விழுப்புரத்தில் வசிக்கும் மீராவின் பெற்றோருக்கு இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவித்தனர்.

மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்ததற்கான காரணம் குறித்து அஸ்தம்பட்டி போலீசாரிடம் கேட்டபோது, கடந்த 3 நாட்களாக மீராவுக்கு காய்ச்சல் இருந்து வந்ததாகவும், இதனால் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு விடுதி அறையில் ஓய்வெடுத்து வந்தார். நேற்று இரவு விடுதி அறையில் புழுக்கமாக இருந்துள்ளதால் காற்றோட்டம் வாங்க வெளியே வந்து விடுதி மேல் மாடி சுவரில் இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார் என்று கூறினர்.

இருப்பினும் போலீசார், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News