செய்திகள்

புதுவையில் இளம்பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2018-12-05 11:32 GMT   |   Update On 2018-12-05 11:32 GMT
புதுவையில் 15 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி:

புதுவை கோவிந்த சாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கூலித் தொழிலாளி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் திருவக்கரையில் வைத்து திருமணம் நடந்தது.

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவரது வயது 15 என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து டாக்டர்கள் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குழுவினர் அந்த இளம்பெண் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அந்த பெண்ணுக்கு 15 வயது தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் புகார் அளித்தனர்.

அதை விசாரித்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அந்த புகாரை பெரியகடை போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார் மற்றும் போலீசார் விசாணை நடத்தி இளம்பெண்ணை திருமணம் செய்த மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags:    

Similar News