கொடைக்கானலில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி
கொடைக்கானல்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 50). இவர் தனது மனைவி சுப்புலெட்சுமி (45), மகன் பாண்டியன் (25) ஆகியோருடன் கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் தங்கி பிச்சை என்பவரது எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தார்.
இன்று பாண்டியனுக்கு மதுரையில் பெண் பார்க்க செல்வதாக இருந்தது. அதற்காக அதிகாலையில் ரவி எழுந்து குளித்து விட்டு அருகில் இருந்த கொடி கம்பத்தில் துணியை எடுத்துள்ளார்.
அவர்கள் தங்கியிருந்த குடிசை வீட்டில் இருந்து மின்சார கம்பி அறுந்து தொங்கியதை கவனிக்காமல் இரும்பு கம்பியை தொட்டதால் ரவி மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சத்தம் போட்டு கீழே விழுந்தார். உடனே பாண்டியன் தனது தந்தையை தூக்கி விட முயன்ற போது அறுந்து கிடந்த மின் கம்பி அவரது காலில் சுற்றியது.
இதில் தந்தை, மகன் ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்ததும் சுப்புலெட்சுமி கதறி அழுதார். தன் மகனுக்கு பெண் பார்க்க புறப்பட இருந்த நிலையில் கணவனும் மகனும் பலியானதை பார்த்து கண்ணீர் விட்டார்.
பின்னர் இறந்தவர்களின் உடல்கள் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.