செய்திகள்
திருமங்கலம் அருகே விபத்து - விவசாயி பலி
திருமங்கலம் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா, விவசாயி. இவர் இன்று காலை அருகில் உள்ள அச்சம்பட்டி காலனிக்கு சென்றார்.
அங்கு ரோட்டோரத்தில் உள்ள கடையில் டீ குடித்தார். பின்னர் அங்குள்ள மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது திருமங்கலத்தில் இருந்து வந்த மினிலாரி சுப்பையா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சுப்பையா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.