கோவை அருகே திருமணமான 15 நாளில் புதுப்பெண் தற்கொலை
கோவை:
கணபதி பூந்தோட்டம் 2-வது வீதியை சேர்ந்தவர் சித்திரை சேர்மன். இவரது மனைவி முத்து அபிநயா(வயது 21). இவர்களுக்கு திருமண மாகி 15 நாட்களே ஆகிறது.
சித்திரை சேர்மன் வீடு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை அவர் கடை திறக்கச் சென்று விட்டார். சிறிது நேரத்தில் முத்து அபிநயா வீட்டில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.
இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர். சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்து அபிநயா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 15 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது. முத்து அபிநயாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.