செய்திகள்
கோவை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
திண்டுக்கல் மாவட்டம் சுக்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகள் சத்யா (வயது 20). கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராஜாங்கம் மனைவி, மகளுடன் கோவை துடியலூரில் உள்ள விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு வந்தனர்.
சத்யாவுக்கும் அவரது உறவுக்காரர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதை அறிந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஜாதக பொருத்தம் இருந்தால் பார்க்கலாம் என்றனர். ஒருவேளை ஜாதகம் பொருந்தவில்லை என்றால் காதல் கைகூடாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் சத்யா இருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சத்யா மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.