பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள தெற்கு நல்லியாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 65). விவசாயி. இவர் நேற்று இரவு 7.30 மணிக்கு பரமத்திவேலூர் பழைய பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த லோகேஸ் (27) என்பவர் சாலையில் நடந்து சென்ற தங்கமணி மீது மோதினார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. லோகேசுக்கு மூக்கு, கையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்கள், உடனடியாக அங்கு ஆம்புலன்சை வரவழைத்து 2 பேரையும் அதில் ஏற்றி பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தங்கமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து லோகேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.