திருமங்கலம் அருகே விபத்து: வாலிபர் பலி
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தருமத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் சஞ்சீவி (வயது 15). இவர் கப்பலூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
குதிரைசாரிகுளம் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் பழுதானது. உடனே அதனை அங்கேயே விட்டுவிட்டு சதீஷ்குமார் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் வீட்டில் இருந்த தனது மகன் சஞ்சீவியிடம் மோட்டார் சைக்கிளை எடுத்துவருமாறு கூறியுள்ளார்.
அதன்படி சஞ்சீவி குதிரைசாரிகுளம் 4 வழிச்சாலையில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் சஞ்சீவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.