ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - பெண் பலி
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூரை அடுத்த மெய்யூர் மேட்டு காலனி தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (58) லாரி டிரைவர்.
இவருடைய மனைவி காளியம்மாள் (50), இவர்களுக்கு தேவன் என்ற மகனும், மருதானி என்ற மகளும் உள்ளனர்.
தேவன் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தேவன் தன் தாய் காளியம்மாள், தங்கை மருதானி ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு பென்னாலூர் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார்.
வெலமகண்டிகை பகுதியில் சென்ற போது புலிகுன்றம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் தேவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த காளியம்மாள், தேவன், மருதானி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காளியம்மாளை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.