செய்திகள்

சென்னையில் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றம் - கடந்த ஆண்டை விட 15 டன் குறைவு

Published On 2018-11-07 19:11 GMT   |   Update On 2018-11-07 19:11 GMT
சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 15½ டன் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Diwali #Crackers
சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பட்டாசு வெடித்து குதூகலிப்பது வழக்கம். பட்டாசு வெடிக்கும்போது அதில் சுற்றியிருக்கும் காகிதங்கள் சிதறும். இதனால் தீபாவளி கொண்டாட்டத்துக்கு பிறகு தெருக்கள் முழுவதும் காகித குப்பைகளாகவே காணப்படும். பெரும்பாலானோர் வீட்டின் முன்பு உள்ள குப்பைகளை கூட்டி தெருக்களில் ஆங்காங்கே மேடுகளாக அமைத்து வைத்துவிடுவார்கள். அதனை மாநகராட்சி ஊழியர்கள் வந்து அகற்றுவார்கள்.

அந்தவகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் 19 ஆயிரம் பேர் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் (மாலை 5.30 மணி வரை) 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது.

இந்த கழிவுகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள அபாயகரமான கழிவுகளை சேகரிக்கக்கூடிய தனியார் நிறுவனத்திடம் ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த ஆண்டு 80 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன. அந்தவகையில் கடந்த ஆண்டை விட 15½ டன் குறைந்துள்ளது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 
Tags:    

Similar News