செய்திகள்

புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி கும்பல் கத்தி-அரிவாளுடன் ரகளை: பெண்கள் மீது தாக்குதல்

Published On 2018-11-07 10:03 GMT   |   Update On 2018-11-07 10:03 GMT
புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடிகள் கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி பொது மக்களை தாக்கினர். இதில் 3 பெண்கள் உள்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகர் சேனியம்மன் கோவில் தெருவில் நேற்று இரவு பொது மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

அப்போது 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் 15 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பொது மக்களிடம் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கினர். கத்தி, அரிவாளை காட்டி பொது மக்களை மிரட்டி மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரவுடிகளின் அட்டகாசத்தால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டனர். அவர்கள் ரவுடி கும்பலை விரட்டி பிடிக்க முயன்றனர்.

உடனே ரவுடிகள் கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி பொது மக்களை தாக்கினர். இதில் 3 பெண்கள் உள்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் உஷாரான ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதில் ஒருவனை மட்டும் பொது மக்கள் விரட்டி பிடித்தனர். அவனுக்கு தர்மஅடி கொடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில் பொது மக்களிடம் சிக்கிய வாலிபர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாதேஷ் என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரவுடி கும்பலின் தாக்குதலால் 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. தப்பி ஓடிய ரவுடிகள் குறித்து பிடிபட்ட மாதேசிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News