செய்திகள்

ராஜபாளையத்தில் விபத்து- பூ கட்டும் தொழிலாளி பலி

Published On 2018-10-31 16:35 GMT   |   Update On 2018-10-31 16:35 GMT
ராஜபாளையத்தில் மொபட் மீது வேன் மோதியதில் பூ கட்டும் தொழிலாளி பலியானார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் ஆர்.சி. சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சிவன்குமார். இவரது மகன் சூர்யா (வயது 21). பூ கட்டும் தொழிலாளி. நேற்று இரவு சூர்யா ஆஸ்பத்திரி ரோட்டில் மொபட்டில் சென்றார். அவரது தந்தை சிவன்குமார் தனது அண்ணன் மகன் கருப்பையாவுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்றார்.

அப்போது அந்த வழியே வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக சூர்யா ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சூர்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.

கண்முன்பே மகன் விபத்தில் சிக்கி பலியானதை கண்டு சிவன்குமார் கதறி அழுதார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் வடக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பலியான சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வடக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் தெற்கு மலையடிபட்டி வைரமுத்துவை கைது செய்தனர்.

Tags:    

Similar News