கோவில் திருவிழாவில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு
சென்னை:
தமிழகத்தில் பல மாவட்டங்களில், கோவில் திருவிழாவின் போது ‘ரிக்கார்டு டான்ஸ்’ என்ற பெயரில், ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இதுபோன்ற ஆபாச நடனங்களை கோவில் திருவிழாக்களின் போது நடத்த ஐகோர்ட்டு தடை விதித்தது.
இதையடுத்து பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘தங்கள் கோவில்களில் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் நடன நிகழ்ச்சிகள் காலகாலமாக நடத்தப்படுகிறது. ஆனால், ஆபாச நடனம் என்று கூறி போலீசார் அனுமதி வழங்க மறுக்கின்றனர். எனவே தங்களது கோவில்களில் கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி எம்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஒரு காலத்தில் கோவில் திருவிழா என்றால் வில்லு பாட்டு, கிராமிய பாட்டு என்று நிகழ்ச்சிகள் நடந்தது.
இப்போது அறிவியல் முன்னேற்றம் அடைந்ததால், இதுபோன்ற பல நடனங்கள் எல்லாம் கோவில் திரு விழாக்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, கோவில் திருவிழாவை முன்னிட்டு, கலாச்சார நடனம் என்ற நிகழ்ச்சி நடந்தால், அதை உள்ளூர் போலீசார் வீடியோ கேமரா மூலம் படம் பிடிக்க வேண்டும்.
அதில் ஆபாசம் இருந்தால், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும், தமிழக டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பவேண்டும்.
இந்த வழக்குகளை எல்லாம் வருகிற நவம்பர் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #Temple #highcourt