செய்திகள்

சேலத்தில் ஜவுளிக்கடையில் சேலை திருடிய 3 பெண்கள் கைது

Published On 2018-10-30 18:02 GMT   |   Update On 2018-10-30 18:02 GMT
சேலத்தில் ஜவுளிக்கடையில் சேலை திருடிய தஞ்சையை சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

சேலம் 4 ரோடு பகுதியில் பிரபல தனியார் ஜவுளிக்கடை உள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி எடுக்க இந்த கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இந்த நிலையில் 3 பெண்கள் துணி எடுப்பது போன்று கடைக்கு சென்றனர்.

பின்னர் கடையில் பல்வேறு இடங்களுக்கு சென்று துணிகளை பார்வையிட்டு ஒவ்வொன்றின் விலையை கேட்டனர். ஆனால் அவர்கள் துணிகள் எதுவும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவர்களை நோட்டமிட்டபடி இருந்தனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் ஆளுக்கு ஒரு சேலையை எடுத்து அதை உடலில் மறைத்து வைத்துக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது ஊழியர்கள் அவர்களை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் இது குறித்து கடை மேலாளர் சற்குணம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பவித்ரா (வயது39), ராதா (32), நிர்மலா (34) என்று தெரிவித்தனர். பின்னர் அவர்கள் சேலை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News