செய்திகள்
கூடல்புதூரில் விற்பனை பிரதிநிதி வீட்டில் நகை-பணம் கொள்ளை
கூடல்புதூரில் மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மதுரை:
மதுரை கூடல்புதூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 61), மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் கடந்த 27-ந் தேதி மனைவி சரஸ்வதியுடன், உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு 2 நாட்கள் தங்கிவிட்டு நேற்று இரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது.
அதில் இருந்த 15 பவுன் நகைகள், 340 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.