செய்திகள்

மதுரையில் கல்லூரி மாணவர் சரமாரி வெட்டிக்கொலை- 8 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-10-19 10:12 GMT   |   Update On 2018-10-19 10:12 GMT
கல்லூரி மாணவரை சரமாரி வெட்டிக் கொலை செய்த 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை அனுப்பானடி தெய்வக்கன்னி தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் பிரவின்குமார் (வயது 20). இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பிரவின்குமார் தான் வசிக்கும் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வாராம். இதனால் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சைலோ கண்ணன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அடிக்கடி இவர்களுக்குள் பிரச்சினை வந்ததால் பிரவின்குமார் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்திருந்த பிரவின்குமார் இரவு 9 மணியளவில் அதே பகுதியில் நண்பர் காளி என்பவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த சைலோ கண்ணன், பிரவின்குமாருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சைலோ கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரவின்குமார், காளியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த பிரவின்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைலோ கண்ணன், அவரது ஆதரவாளர்ககள் டோரி ராஜவேல், சோப்பு செல்வகுமார், அய்யர் பிரவின்குமார், விஜி என்ற விக்கி, பாலா என்ற பாலகணேஷ், மணி, ஏபிசிடி அருண் ஆகிய 8 பேரையும் தேடி வருகின்றனர்.

பிரவின்குமாரை கொலை செய்த இதே கும்பல் முன் விரோதம் காரணமாக அம்பேத்கார் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அரச மகாராஜன் (20) என்பவரையும் நேற்று இரவு அரிவாளால் வெட்டியது குறிப்பிடத்தக்கது. இது குறித்தும் தெப்பக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News