செய்திகள்

மதுரை அருகே டிரைவரை கட்டிப்போட்டு லாரி கடத்தல்- போலீசார் விசாரணை

Published On 2018-10-17 08:05 GMT   |   Update On 2018-10-17 08:05 GMT
மதுரை அருகே ரூ.16 லட்சம் மதிப்புள்ள பருப்பு மூட்டைகளுடன் லாரியை கடத்திச்சென்ற 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:

நாமக்கல் மாவட்டம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 56). லாரி டிரைவர். இவர் சேலத்தில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நடராஜன் சேலத்தில் இருந்து 480 பருப்பு மூடைகளை ஏற்றிக் கொண்டு மதுரை வந்தார்.

மதுரை - திண்டுக்கல் மெயின் ரோட்டில் லாரியை ஓரத்தில் நிறுத்தினார். அப்போது அங்கு வந்த 4 பேர் நடராஜனிடம் கத்தியை காட்டி தகராறு செய்தனர். உடனே நடராஜன் லாரியை எடுக்க முயன்றபோது 4 பேரும் கத்தியை காட்டி மிரட்டி நடராஜனை லாரியில் இருந்து கீழே தள்ளினர். பின்னர் அவரை கட்டிப்போட்டு விட்டு பருப்பு லோடுடன் 4 பேரும் லாரியை கடத்தி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 16 லட்சம் ஆகும்.

இதுகுறித்து நடராஜன் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் கடத்தி செல்லப்பட்ட லாரி குறித்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

சிறிது நேரத்தில் லாரியை கடத்திய 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News