செய்திகள்

ஆரணி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி - நகைகள் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றம்

Published On 2018-10-07 16:11 GMT   |   Update On 2018-10-07 16:11 GMT
ஆரணி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றனர். ஆனால் நகைகள் எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த இ.பி.நகரை சேர்ந்தவர் தரணி (வயது 57), இவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் மகன் ரஞ்சித் வசித்து வருகிறார். அவர் சென்னையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா பிரசவத்திற்காக தாய்வீடான காஞ்சீபுரத்திற்கு சென்றுள்ளார். இதனால் இந்த வீடு கடந்த சில மாதங்களாகவே பூட்டி கிடந்தது. தரணி பகலில் மட்டும் வீட்டுக்கு வந்து சிறிதுநேரம் இருந்து செல்வார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதாக தரணிக்கு தகவல் கிடைத்தது. அவர் வந்து பார்த்தபோது, பீரோக்கள் திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. நகை, பணம் எதுவும் வீட்டில் இல்லை. வெள்ளிப் பொருட்கள் இருந்தது. ஆனால் அவை திருட்டு போகவில்லை. வீட்டின் வராண்டாவில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மட்டும் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து தரணி ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார்.

மேலும் இதே பகுதியில் நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த டாக்டர் கோகுல் என்பவரின் வீட்டுடன் இணைந்த மருத்துவமனை கட்டிடத்திலும் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. தகவல் அறிந்த டாக்டர் கோகுல் அம்மாபாளையம் கிராமத்தில் இருந்து வந்து பார்வையிட்டார்.

தற்போது அவரது மனைவி தர்ஷனி கர்ப்பிணியாக இருப்பதால் தாய்வீடான சிறுமூர் கிராமத்துக்கு சென்றுள்ளார். மேலும் வீட்டில் இருந்த நகை, பணம் உள்பட அனைத்து பொருட்களும் அங்கு கொண்டு சென்றுவிட்டதால் வீட்டில் எதுவும் இல்லை.

2 வீடுகளிலும் நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் டாக்டர் கோகுல் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News