செய்திகள்

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் காணாமல் போவார்கள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2018-10-05 09:40 GMT   |   Update On 2018-10-05 09:40 GMT
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் காணாமல் போன வரலாறு தான் உண்டு என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #ADMK #TNminister #KadamburRaju
தூத்துக்குடி:

மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்வது குறித்த முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் கடந்த 2015-ல் வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டன. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை. ஓடைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் ஏற்பட்டால் தேங்காமல் கடலுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டால் எதிர்கொள்ள உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 25 முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அலுவலகம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்டால் 100 சதவீதம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும் போது, ‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். தேர்தல் பயம் எங்களுக்கு கிடையாது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் காணாமல் போன வரலாறு தான் உண்டு. டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வில் இணைவது என்பது அவரது முடிவு’ என்றார். #ADMK #TNminister #KadamburRaju
Tags:    

Similar News