காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
திருச்சி:
பாரதீய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்க.ராஜைய்யன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.
மாவட்ட முன்னாள் தலைவர் பார்த்திபன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த இடத்தில் தற்காலிக ஏற்பாடு தான் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, முக்கொம்பில் மிக விரைவில் புதிய அணை கட்ட வேண்டும். காவிரி ஆற்றில் இரவு, பகலாக மணல் அள்ளியதன் விளைவு தான் கொள்ளிடம் அணை உடைய காரணம் என தெரியவந்துள்ளது.
ஆகவே மணல் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் தடுப்பணைகள், பாலங்கள் அமைந்துள்ள பகுதியில் 10 கி.மீட்டர் தொலைவுக்கு மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்.
மத்திய அரசு திருச்சி மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்தது அல்லாமல் பல கோடிரூபாயை நகர் வளர்ச்சிக்கும், தூய்மைக்கும் நிதி ஒதுக்கியும் மாநகரில் தாராநல்லூர், மேலசிந்தாமணி, வெனீஸ்தெரு உள்பட பல பகுதிகளில் சாக்கடைகளில் குப்பைகள் தேங்கி கழிவு நீர் செல்ல முடியாததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி விமான நிலையத்தில் அமைக்கப்பட உள்ள புதிய முனையத்துக்கு மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ரெங்கராஜன் குமாரமங்கலம் பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #bjp