செய்திகள்

சமுதாய கொடிக்கம்பம் சேதம்- போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2018-10-01 10:33 GMT   |   Update On 2018-10-01 10:33 GMT
கோவில்பட்டியில் சமுதாய கொடிக்கம்பம் சேதம் அடைந்தது குறித்து அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி கடலையூர் ரோடு ராயல்மில் அருகே பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அமர்ந்து மது குடிப்பது, அரட்டை அடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் ஒரு சமுதாய கொடிகம்பம் நிறுவப்பட்டது. இந்த கம்பத்தின் அடியில் கொடி பீடம் அமைத்திருந்தனர். சமூக விரோதிகள் அந்த கொடி பீடத்தில் அமர்ந்து ரகளை செய்து வந்தார்கள் .

இதையடுத்து கொடி கம்பம் அமைத்தவர்கள் கொடிபீடத்தை கூம்பு வடிவில் மாற்றி கட்டினார்கள். நேற்று இரவு மர்ம நபர்கள் அந்த கொடி பீடத்தை இடித்து சேதப்படுத்திவிட்டார்கள். இன்று காலை அப்பகுதியில் கொடி பீடம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கொடி பீடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொடிபீடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News