செய்திகள்
தருமபுரியில் அதிகரித்துவரும் தெரு நாய்கள் தொல்லை
தருமபுரியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி நகரில் தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக பி.ஆர். சுந்தரம் தெரு, முஹம்மது அலி கிளப் ரோடு, ஆறுமுகம் ஆசாரி தெரு, பென்னாகரம் மெயின் ரோடு, நகர் மற்றும் புறநகர் பஸ் நிலையங்களில் சுற்றிதிரிகின்றன. காலை, இரவு நேரங்களில் தனியாக நடந்து வருபவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களை இந்த நாய்கள் துரத்தி செல்கின்றன. சில சமயங்களில் சில நாய்கள் கடித்து கொதறுகின்றது.
இந்த நாய்கள் நகராட்சி குப்பை வண்டிகளை கண்டால் வண்டியில் பின்னால் கூட்டம் கூட்டமாக செல்கின்றன. குப்பை வண்டியில் வரக் கூடிய கழிவுகள் மற்றும் இறைச்சிகளை நாய்கள் உண்கின்றன.
இத்தகைய நாய்கள் பொதுமக்களை கடித்தாள் தொற்று நோய் பரவி பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இவற்றைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.