செய்திகள்

நூதன முறையில் மணல் கடத்திய 4 பேர் கைது - 2 லாரிகள் பறிமுதல்

Published On 2018-09-26 17:51 GMT   |   Update On 2018-09-26 17:51 GMT
நூதன முறையில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 2 லாரிகள்-மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
கல்லக்குடி:

திருச்சி மாவட்டம் கல்லக்குடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மந்திரிகுமாரி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் புதூர்பாளையம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிள் முன்னே வர அதைத்தொடர்ந்து 2 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. அந்த லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, 2 லாரிகளிலும் நூதனமுறையில் மணலை நிரப்பி அதற்கு மேல் செங்கற்களை அடுக்கி கடத்தி வந்தது தெரிய வந்தது.

அப்போது ஒரு லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொரு லாரி டிரைவரிடம் விசாரணை நடத்திய போது அவர், தஞ்சாவூர் சங்கர் திடலை சேர்ந்த கணபதி (வயது 40) என்பதும், அதில் வந்த தொழிலாளர்கள் திருவையாறு தாலுகா கண்டியூரை சேர்ந்த மணிவண்ணன் (46), நேதாஜி (22) மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தது கண்டியூரை சேர்ந்த செல்லதுரை (40) என்பதும் தெரிய வந்தது.

பின்னர் அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொரு லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. 
Tags:    

Similar News