செய்திகள்
திருவொற்றியூரில் வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பறித்த 2 பேர் கைது
திருவொற்றியூரில் வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு ஈசான மூர்த்தி கோவில் தெருவில் பணி முடிந்து செல்போனில் பேசியபடியே நடந்து சென்றார்.
அப்போது 2 வாலிபர்கள் அவரிடம் செல்போனை பறிக்க முயற்சித்தனர். ஆனால் கார்த்திக் போராடினார். ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கத்தியால் கார்த்திக்கின் வயிற்றில் குத்தி விட்டு செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். மயங்கி கீழே விழுந்த கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணலியை சேர்ந்த அஜித் (19) திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரத்குமார் (18)ஆகிய இருவரையும் கைது செய்தனர்.