திருப்பூரில் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
திருப்பூர்:
திருப்பூர் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சுரேஷ். இவருக்கு திருமணமாகி 3 மாதம் தான் ஆகிறது. சுரேஷ் திருப்பூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் தங்கி இருந்தார்.
அவருடன் 150-க்கும் மேற்பட்ட போலீசாரும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் சுரேஷ் திருப்பூர் கே.டி.சி. நகரில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு சென்று இருந்தார்.
அங்கு இன்று காலை சுரேஷ் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சுரேசை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுரேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணி பளு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என்பது தெரியவில்லை.
போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுரேசிடம் விசாரணை நடத்தினார்.
இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.