செய்திகள்

வில்லியனூர் அருகே உடல் கருகி இறந்து கிடந்த தொழிலாளி எரித்து கொலையா?

Published On 2018-09-21 10:26 GMT   |   Update On 2018-09-21 10:26 GMT
வில்லியனூர் அருகே தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து அவருடைய 2 மகன்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

வில்லியனூரை அடுத்த மங்கலம் திருக்காஞ்சிபேட் புதுநகர் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 55). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி சரசு (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அழகுதுரைக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்றும் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்தார்.

கணவரிடம் சரசு இப்படி வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்தால் எப்படி? பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். என்று கூறி திட்டிவிட்டு அவர் வேலைக்கு சென்றார். இதில் மனவேதனை அடைந்த அழகுதுரை தனது வீட்டின் அருகே புதிய வீடு கட்டும் இடத்துக்கு சென்றார்.

மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரசு மண்எண்ணை வாசம் அடித்ததை கண்டு அக்கம் பக்கம் சுற்றி பார்த்தார். அப்போது தனது கணவர் அங்கு எரிந்த நிலையில் உடல் கருகி இறந்து கிடந்தார். இதை கண்டு அவர் கதறி அழுதார்.

இதுகுறித்து சரசு மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அழகுதுரை சாவில் மர்மம் உள்ளது. அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கான தடயங்கள் இல்லை. எனவே, அவர் எரித்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதனால் அவருடைய 2 மகன்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News