செய்திகள்

திண்டுக்கல் அருகே பெண் தற்கொலை - தாய் போலீசில் புகார்

Published On 2018-09-19 11:43 GMT   |   Update On 2018-09-19 11:43 GMT
திண்டுக்கல் அருகே வரதட்சணையால் தனது மகள் இறந்துள்ளதாக தாய் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
வடமதுரை:

திண்டுக்கல் அருகே அய்யலூரை சேர்ந்தவர் வைரபெருமாள். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை மகாலட்சுமி வீட்டில் பிணமாக தொங்கி உள்ளார்.

இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து மகாலட்சுமியின் தாயார் மகேஸ்வரி வடமதுரை போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியதாவது:-

எனது மகள் மகாலட்சுமியிடம் அவரது கணவர் தனக்கு ரூ.5 லட்சம் வரை கடன் இருப்பதாகவும் தங்கள் வீட்டில் இருந்து பணம் வாங்கி வர வேண்டும் என கூறி வற்புறுத்தி உள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாகவே மகாலட்சுமி மனஉளைச்சலில் இருந்தார். எங்களிடம் கூறியபோது விரைவில் பணம் ஏற்பாடு செய்து தருகிறேன் என நான் கூறினேன்.

இந்த நிலையில் வைரப்பெருமாளின் உறவினர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது என கூறினார்.

எனவே மகாலட்சுமியின் சாவில் மர்மம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஆர்.டி.ஓ. அருண்ராஜ் மற்றும் வேடசந்தூர் டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News