செய்திகள்

நத்தம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

Published On 2018-09-18 10:33 GMT   |   Update On 2018-09-18 10:33 GMT
நத்தம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தீராத பிரச்சினையாக உள்ளது. நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் பழுதானது. இதனால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மோட்டாரை சீரமைக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சிறுகுடி- நத்தம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் நத்தம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் பொது மக்களிடம் சமரசம் பேசினர். மோட்டாரை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News