செய்திகள்

தனியார் நிறுவனத்தில் இருந்து 24 லாரிகளில் கடல் மணல் கடத்தல்

Published On 2018-09-18 09:05 GMT   |   Update On 2018-09-18 09:05 GMT
தனியார் நிறுவனத்தில் இருந்து 24 லாரிகளில் கடல் மணல் கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #sandrobbey

திருவொற்றியூர்:

திருவொற்றியூர், ஜீவன்லால் நகர் பகுதியில் தனியார் கம்பெனி ஒன்று பல ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. இந்த கம்பெனிக்கு சொந்தமான இடம் பல ஏக்கரில் அங்கு உள்ளது. கடல் அருகில் இருப்பதால் அப்பகுதி முழுவதும் கடல் மண்ணாக இருந்தது.

இந்த நிலையில் அங்குள்ள கடல் மண்ணை மர்ம கும்பல் லாரியில் கடத்துவதாக திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது தனியார் கம்பெனி இடத்தில் இருந்து 24 லாரிகளில் கடல் மணல் கடத்தப்படுவது தெரிந்தது. உடனடியாக போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து 24 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரிகளில் இருந்த 37 பேரும் சிக்கினர்.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை சென்னை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பிடிபட்ட 37 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

கடல் மண்ணை கடத்தி செல்லும் கும்பல் அதனை தனி இடத்தில் கொட்டி வைத்து ஆற்று மணலுடன் கலந்து குறைந்த விலைக்கு விற்று வந்தது தெரிந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் பகுதியில் குடோனில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 150 டன் கலப்பட மணல் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News