திண்டுக்கல்லில் எலுமிச்சை பழம் விலை கடும் உயர்வு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சிறுமலையில் அதிக அளவு எலுமிச்சை பழம் விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து நாகல்நகர் பாலம் அருகே உள்ள சிறுமலைசெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சந்தைக்கு மணப்பாறை, பன்றிமலை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் எலுமிச்சை பழங்கள் கொண்டு வரப்படுகிறது.
இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் எலுமிச்சை விளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
மேலும் ஆந்திரா பகுதியில் இருந்து எலுமிச்சை வரத்து இல்லாததால் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக சிறுமலை செட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிப்பம் ரூ.1500-க்கு விற்பனையானது.
ஆனால் தற்போது ரூ.5 ஆயிரம் வரை விலை போகிறது. விளைச்சல் அதிகரித்தபோதும் விலை பல மடங்கு கூடி உள்ளது. இதனை பெரும்பாலும் வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்து விடுவதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எலுமிச்சை பழங்களை கூடுதல் விலைக்கு வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே எலுமிச்சை பழங்களை உபயோகப்படுத்த திண்டுக்கல் பகுதி மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.