செய்திகள்

70 ரூபாய் கடனுக்காக சிறுவனை கத்தரிக்கோலால் குத்திய வாலிபர் கைது

Published On 2018-09-14 10:11 GMT   |   Update On 2018-09-14 10:11 GMT
கோட்டக்குப்பத்தில் 70 ரூபாய் கடனுக்காக சிறுவனை கத்தரிக்கோலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் மோசார் வீதியை சேர்ந்தவர் உதுமான் அலி. இவரது மகன் அசாருதீன் (வயது 17). இவரும், அதே பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (19) என்பவரும் திருமணம் மற்றும் விசே‌ஷங்களுக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்ய செல்வது வழக்கம்.

அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்டரிங் சர்வீஸ் செய்ததில் இஸ்மாயிலுக்கு அசாருதீன் ரூ.70 தர வேண்டி இருந்தது. இந்த பணத்தை அசாருதீனிடம் கேட்டு இஸ்மாயில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் அசாருதீன் நேற்று இஸ்மாயில் வீட்டு வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அசாருதீனை வழிமறித்து தர வேண்டிய பணம் குறித்து இஸ்மாயில் கேட்டார்.

அதற்கு அசாருதீன் தற்போது பணம் இல்லை. பிறகு தருவதாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்மாயில் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து அசாருதீனின் தோள் பட்டையில் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அசாருதீன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இஸ்மாயிலை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News