மதுரை:
மதுரை அழகர்கோவில் அருகே உள்ளது அரும்பனூர் கிராமம். இங்குள்ள பெரியாறு பாசன கால்வாய் பகுதிக்கு இன்று காலை சென்றவர்கள் அங்கு வாலிபர் பிணம் காயங்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த வாலிபரின் உடலில் காணப்படும் காயங்கள் பாட்டிலால் குத்தப்பட்டது போன்று இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் வாடிப்பட்டி அருகே உள்ள எருக்கலைநத்தம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது32) என தெரியவந்தது.
அவரை யாரோ கொலை செய்து பெரியாறு பாசன கால்வாயில் உடலை வீசி இருக்கலாம். தண்ணீரின் வேகத்தில் குமாரின் உடல் இங்கு மிதந்து வந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மது அருந்தும் தகராறில் நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்தார்களா? என்பது மர்மமாக உள்ளது.
இது குறித்து ஒத்தக்கடை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.