செய்திகள்

குளித்தலை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - நகை மதிப்பீட்டாளர் பலி

Published On 2018-09-08 17:09 GMT   |   Update On 2018-09-08 17:09 GMT
குளித்தலை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் நகை மதிப்பீட்டாளர் பலியானார்.
குளித்தலை:

குளித்தலை அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன்(வயது 34). இவர் நச்சலூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் குளித்தலை- மணப்பாறை சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது இறும்பூதிபட்டியில் உள்ள மின்சாரவாரிய அலுவலகம் அருகே சாலையில் லாரி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த லாரியில் எந்தவிதமான விளக்கும் எரியவில்லையாம். மேலும் லாரி நிறுத்தி இருந்த சாலையில் எந்தவித தடுப்பும் வைக்கப்படாமல் இருந்துள்ளது. இதன்காரணமாகவும், அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மணிவண்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அந்தவழியாக வந்த வாகனத்தில் ஏற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News