செய்திகள்

நாமக்கல் அருகே ரெயில் தண்டவாளத்தில் கார் டிரைவர் பிணம்

Published On 2018-09-08 11:33 GMT   |   Update On 2018-09-08 11:33 GMT
நாமக்கல் அருகே ரெயில் தண்டவாளத்தில் கார் டிரைவர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்:

நாமக்கல், கா.வேட்டிப் பட்டி, சிட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்கள் கிருஷ்ணமூர்த்தி (வயது29), ரஞ்சித்.

இதில் கிருஷ்ணமூர்த்தி கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். ரஞ்சித் ஆட்டோ டிரைவராக உள்ளார்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ண மூர்த்திக்கும், நாமக்கல்லை சேர்ந்த கார்த்திகா (25) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 3 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

கிருஷ்ணமூர்த்தி நேற்று காலையில் நாமக்கல் அருகே உள்ள இலத்துவாடி பகுதியில் வசித்தும் வரும் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக இலத்துவாடி பகுதி வழியாக செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு அவர் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிப்பட்டு கிருஷ்ணமூர்த்தி தண்டவாள பகுதியில் பிணமாக கிடந்தார். இன்று காலை பொதுமக்கள் பார்த்து, இது பற்றி நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ண மூர்த்தி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மனைவி கார்த்திகா அங்கு வந்து கணவர் உடலை பார்த்து கதறி அழுதார்.

நாமக்கல் ரெயில்வே தண்டவாள பகுதி சேலம் ரெயில்வே போலீசார் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே, யாரேனும் ரெயிலில் அடிப்பட்டு இறந்தால் உடலை மீட்டு சேலம் ரெயில்வே போலீசார் தான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பார்கள்.

ஆனால், நாமக்கல் போலீசார், கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அவரது தம்பி ரஞ்சித் மற்றும் குடும்பத்தினர் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் கிருஷ்ணமூர்த்தி இறப்பு குறித்து முழுவிசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News