செய்திகள்

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது முற்றிலும் நிறுத்தம்

Published On 2018-09-04 09:50 GMT   |   Update On 2018-09-04 09:50 GMT
பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. #PoondiLake

ஊத்துக்கோட்டை:

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.

இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

புழல் ஏரியில் சேமித்து வைக்கப்படம் தண்ணீரை வட சென்னையிலும், செம்பரம்பாக்கம் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு தென் மற்றும் மத்திய சென்னை பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கோடை வெயில் காரணமாக கண்டலேறு அணை வறண்டதால் மார்ச் 26-ந்தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஜனவரி 2-ந்தேதி முதல் மார்ச் 26-ந் தேதி வரை 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம் காரணமாக பூண்டி ஏரியில் நீர் இருப்பு குறைந்தது. இதனால் மே 21-ந்தேதி லிங்க் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. பேபி கால்வாய் மூலம் மட்டும் சென்னை குடிநீருக்கு 10 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. தற்போது வெறும் 12 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மில்லியன் கன அடியாகும்.

ஏரியில் நீர் இருப்பு குறைந்ததால் நேற்று இரவு முதல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரும் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

Tags:    

Similar News