செய்திகள்

திசையன்விளையில் மினி பஸ் மோதி தொழிலாளி பலி - டிரைவர் கைது

Published On 2018-09-01 17:53 GMT   |   Update On 2018-09-01 17:53 GMT
திசையன்விளையில் நேற்று மினி பஸ் மோதி, தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:

திசையன்விளை நவ்வலடி ரோடு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் மகன் ஆத்திமுத்து (வயது 20). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மதியம் ஆத்திமுத்து தனது மோட்டார் சைக்கிளில் திசையன்விளை சந்தி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது உவரியில் இருந்து திசையன்விளை நோக்கி வந்து கொண்டிருந்த மினி பஸ், எதிர்பாராதவிதமாக ஆத்திமுத்து மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் நிலைதடுமாறிய அந்த மினிபஸ் நிற்காமல் அருகில் இருந்த சைக்கிள், மின்கம்பம் மற்றும் டீக்கடை சுவர் மீது மோதி நின்றது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆத்திமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவர் மேலபண்டாரபுரத்தை சேர்ந்த நவீன்ராஜ் (25) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News