செய்திகள்

மயக்க ஊசி செலுத்தாமல் பெண்ணுக்கு தையல் போட்ட விவகாரம்: மருத்துவமனையில் இணை இயக்குனர் விசாரணை

Published On 2018-09-01 04:21 GMT   |   Update On 2018-09-01 04:21 GMT
மயக்க ஊசி செலுத்தாமல் பெண்ணுக்கு தையல் போட்ட விவகாரம் தொடர்பாக இணை இயக்குனர் நேரில் விசாரணை நடத்தினார்.
வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூண்டியை சேர்ந்தவர் கோபால். இவர், வத்தலக்குண்டுவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்தார். பின்னர் அவர் ஊருக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தார். கொடைக்கானல் மலைப்பாதையில் இரண்டாங்கரை என்ற இடத்தில் சென்றபோது, கொடைக்கானலில் இருந்து மதுரை நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம் அடைந்து தவித்து கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த கோபால், உடனடியாக அவர்களை தனது காரில் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.

இந்த நிலையில் அவர்களுக்கு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆனால் அதில் மங்கையர்கரசி என்ற பெண்ணின் மூக்கில் இருந்து அதிகளவு ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அவருக்கு தையல் போட சொல்லி கோபால் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் மருத்துவமனை ஊழியர், மங்கையர்கரசிக்கு மயக்க ஊசி செலுத்தாமல் தையல் போட்டதாக தெரிகிறது. மேலும் அவர் சீருடை அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த மங்கையர்கரசி வலி தாங்க முடியாமல் துடித்துள்ளார். ஆனால் மருத்துவமனை ஊழியர் அப்படியே தையல் போட்டதாக தெரிகிறது. இதை கோபால் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து நேற்று மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். வத்தலக்குண்டு அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் மணிமேகலை உள்பட மருத்துவமனை பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். நீண்ட நேர விசாரணைக்கு பிறகு இதுதொடர்பான அறிக்கை மாநில இயக்குனருக்கு அனுப்பப்படும் என்று கூறினார். 
Tags:    

Similar News